மயிலாடுதுறை: மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபோது இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்தபோது மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு சமூகத்தினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். காவல் துறையினர் தடியடி நடத்தி அப்போது கூட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது திருவுருவப் படம் வைத்து அஞ்சலி செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கேட்ட நிலையில், பட்டவர்த்தி கிராமத்தில் அதே நாளில் அப்பகுதியில் உள்ள கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெற இருப்பதால் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக்கூறி, மதகடி பகுதியில் கறுப்புக்கொடி ஏந்தி அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-01-ambedkar-birthday-issue-5days-144-prohibition-visual-tn10023mp4_12042022190750_1204f_1649770670_864.jpg)
அதனைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல் 12) மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தலைமையில் இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட இருசமூகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மதகடி பகுதியிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஐந்து நாட்களுக்கு 144 (3) தடை உத்தரவை கோட்டாட்சியர் பாலாஜி பிறப்பித்துள்ளார். நாளை(ஏப்ரல் 13) காலை 6 மணி முதல் 17ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
![அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-01-ambedkar-birthday-issue-5days-144-prohibition-visual-tn10023mp4_12042022190750_1204f_1649770670_683.jpg)
![அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-01-ambedkar-birthday-issue-5days-144-prohibition-visual-tn10023mp4_12042022190750_1204f_1649770670_70.jpg)
இதையும் படிங்க: அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டம்