மதுரையில் சித்திரைத் திருவிழா இன்று (ஏப். 15) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது. இதனிடையே, கரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதியின்றி சித்திரைத் திருவிழா நடத்தப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை பக்தர்கள் அனுமதியுடன் நடத்தக் கோரி இளைஞர்கள், மாணவர்கள், மருதுசேனை அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். மாணவர்கள் சிலம்பாட்டம் நிகழ்த்தியபடி கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்தனர். போராட்டத்தையடுத்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாரயணன் கூறுகையில், "தேர்தல் நேரத்தில் பொதுமக்களை கூட்டமாக நடமாடவிட்டனர். தற்போது, கரோனா எனக் கூறி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இதில் ஏதோ சதி நடக்கிறது. சுயநலத்திற்காக அரசு பொதுமக்களை வஞ்சிக்கின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: மரணமடைந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு இழப்பீடு