தட்டச்சு, கணினி பயிற்சிப் பள்ளிகளின் சங்க மாநில தலைவர் செந்தில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கரோனா நோய் தொற்றால் அனைத்து பயிற்சி மையங்களும் மூடப்பட்டன. பத்தாயிரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பணியை சார்ந்தே தங்களின் வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில், தற்போது வரை இந்த மையங்களை திறப்பது தொடர்பாக எவ்வித தளர்வுகளும் வழங்கப்படவில்லை.
இது குறித்து அரசிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித பதிலும் இல்லை. மையங்களை திறக்க அனுமதி அளிக்கும் பட்சத்தில் சானிடைசர்களை பயன்படுத்துவது, தகுந்த இடைவெளியை பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது போன்றவற்றை உறுதியாக கடைபிடிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
ஆகவே, பத்தாயிரம் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தட்டச்சு, கணினி பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இதே போல சோம சங்கர் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "ஆகஸ்ட் 30ஆம் தேதி பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கியுள்ளது. அதன்படி செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தட்டச்சு உள்ளிட்ட பயிற்சிப் பள்ளிகள் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.