கன்னியாகுமரி ரயில் நிலையத்தை தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின், ரயில்வே பணியாளர்கள், விவேகானந்தா கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சுகாதாரம் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமேலாளர் ராகுல் ஜெயின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தென்னிந்தியாவில் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ஏற்கனவே நான்கு நடைமேடைகள் உள்ள நிலையில் மேலும் இரண்டு நடைமேடைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
தென்னக ரயில்வேயில் ஓடும் ரயில்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தற்போது 40 விழுக்காடாக குறைந்துள்ளது. மேலும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த ரயில்வே காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.