காஞ்சிபுரம் சின்னையான் சத்திரம் அடுத்துள்ள சிங்காடிவக்கம் பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. சிங்காடிவக்கம் அரசுப்பள்ளி அருகே கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கிவருகிறது.
கடந்த 32 ஆண்டுகளாக இயங்கிவரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக அவ்வப்போது உரிய பராமரிப்புப் பணி மேற்கொள்ளாத காரணத்தினால் ரசாயன கழிவுகள் உள்ளிட்டவை வெளியேறிவருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுவைத்துள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு செயல்பட்டுவரும் ரசாயன ஆலையில் ரசாயன புகை, ரசாயன கழிவுகள் வெளியேறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவின் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரசாயன ஆலையை ஒட்டியுள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ரசாயன ஆலையிலிருந்து திடீரென்று வெளியேறிய புகையின் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்குப் புகாரினை கிராம மக்கள் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேற்று (ஆக. 6) வருகைபுரிந்த சென்னை கிண்டி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த அலுவலர்கள் அதிநவீன கருவிகள் கொண்டு காற்றில் கலந்துள்ள மாசு குறித்து ஆய்வுமேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில் காற்றில் மாசு கலந்துள்ளதா, இல்லையா என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு பயப்பட தேவை இல்லை - அமைச்சர் கே.என்.நேரு