ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ல.கள்ளிப்பட்டி அருகில் செயல்படும் ராயல் ஃபெர்டிலைசர் என்ற மொத்த உர விற்பனை நிலையம் செயல்பட்டுவருகிறது. இதன் உரிமையாளர் சோமசுந்தரம் ஸ்ரீநகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஆக.31) நள்ளிரவு கோவை, ஈரோட்டிலிருந்து வந்திருந்த வருமான வரித்துறை அலுவலர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் உதவியுடன் திடீரென சோமசுந்திரத்தின் வீட்டினுள் நுழைந்து சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரின் அருகில் அமைந்துள்ள ராயல் ஃபெர்டிலைசர் என்ற அவரது நிறுவனம், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டனர். நிலம் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உர விற்பனையில் கொள்முதல் விற்பனை, வருமான வரி உள்ளிட்ட ஆவணங்களையும் சரி பார்த்தனர்.
சோதனையில் கணக்கில் வராத ரூ.4 கோடி ரொக்கம் வீட்டில் இருந்தாகவும், அதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சோமசுந்தரம் அவர் உறவினர்கள் 12 பேருக்கு சொந்தாமான காலியிடம் கோபிசெட்டிபாளையம் மின் நகரில் இருந்ததை நேற்று(செப்.1) விற்பனை செய்ததாகவும், அதனை 12 பேருக்கு பிரித்து கொடுக்கவேண்டிய தொகை ரூ.4 கோடி வீட்டில் வைத்திருந்தபோது வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தைத் திரும்ப பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சோமசுந்தரத்தின் உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உர விற்பனை நிலைய உரிமையாளர் வீடு, அலுவலங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை செய்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூரியாவை பதுக்கிய கடைக்காரர்... ரெய்டு விட்ட அமைச்சர்!