ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். தமிழ்நாட்டில், பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.
ஆடுகள் விற்பனை
இந்நிலையில், இன்று இந்தக் கால்நடைச் சந்தைக்கு வெள்ளாடு, செம்மறியாடு, ஆட்டு குட்டிகள் என 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அப்போது, ஆட்டுக்குட்டி ரூபாய் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையிலும், வெள்ளாடுகள் ரூபாய் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூபாய் 5 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை போனது.
மகிழ்ச்சியில் விவசாயிகள்
சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் ரூபாய் 60 லட்சத்திற்கு விற்பனையானது. மார்கழி மாதம் ஆடுகள் விற்பனை மந்தமான நிலையில், தற்போது தைப்பொங்கல் பண்டிகை முடிந்து ஆடுகள் விற்பனை சூடு பிடித்ததால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.