திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது.
இங்கு மழை வளம் பெருக வேண்டி நிலா பெண் என சிறுமி ஒருவரைத் தேர்வு செய்து வழிபடுவது வழக்கம்.
இதற்காக இந்த கிராமத்திலுள்ள சிறுமிகள் பொது இடத்தில் இரவு முழுவதும் அமர வைக்கப்படுவர். எந்தச் சிறுமி விடியும் வரை தூங்காமல் இருக்கிறாரோ அந்தச் சிறுமி நிலா பெண்ணாகத் தேர்வு செய்யப்படுவார்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று (ஜனவரி 18)) நடைபெற்றது. 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்து கொண்டதில் விஸ்வநாதன் மற்றும் விசாலாட்சி தம்பதியின் மகள் பிரத்திக்ஷா, நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் 3 ஆண்டுக்கு நிலா பெண்ணாக இருப்பார். தேர்வு செய்யப்பட்ட சிறுமி எல்லையிலுள்ள சரளிமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து அவர் ஆவாரம் பூ நிரம்பிய கூடையை தலைச்சுமையாக தேவிநாயக்கன்பட்டி எடுத்து வந்தார்.
ஊர் திரும்பிய சிறுமிக்கு, ஊர் மக்கள் மலர் மாலை அணிவித்தும், மலர் கிரீடம் சூட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாடச்சியம்மன் கோயிலுக்கு சென்று சிறுமி வழிபட்டார். தொடர்ந்து ஊர் எல்லையில் முறைமாமன்கள் தென்னை ஓலையால் மேய்ந்திருந்த குடிசையில் சிறுமி அமர வைக்கப்பட்டார். பின்பு, பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சிறுமியை கோயிலுக்கு அழைத்து வந்தனர்.
கோயில் முன்பு சிறுமி அமர வைக்கப்பட்டு கும்மியடித்து சடங்கு செய்யப்பட்டது. இன்று (ஜனவரி 19) அதிகாலை நிலா மறையத் தொடங்கியதும் ஆவாரம்பூ நிரம்பிய கூடையை சிறுமி தூக்கி சென்று அப்பகுதியிலுள்ள குளத்தில் வீசுவார்.
பின், தண்ணீரில் மிதந்த பூக்களில் அவர் விளக்கேற்றினார். இந்த விளக்குத் தொடர்ந்து 7 நாள்கள் எரியும் என்பது ஐதீகம்.
இதனால் மக்கள் நோய் நொடியின்றி, ஊர் செழித்து, மழை வளம் பெருகி சிறப்போடு வாழ்வார் என்பது மூதாதையர்களின் கூற்றாக இருக்கிறது. இதை தற்போது வரை இப்பகுதி மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவிகள் புகை பிடிக்கும் காணொலி வைரல்