கோவை : சித்ரா பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு, சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி அதிகாலை சார்ஜாவில் இருந்து வந்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வு பிரிவு துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஆறு பயணிகளைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை பரிசோதனை செய்தனர்.
இதில் தங்க கட்டிகளும், சிகரெட், எலக்ட்ரானிக் பொருட்களும் மறைத்து வைத்து அவர்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆறு பேரையும் கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் 1 கோடியே 92 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளையும், 1 கோடியே 16 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இவர்கள் ஆறு பேரும் சென்னை, தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களுக்கு பல்வேறு கடத்தல் நபர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் ஆறு பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : பரிசு பொருள் என்ற பெயரில் வந்த பார்சல்களில் விஷப்பூச்சி