சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் நிலோபர் கபில் இன்று இணையதளம் மூலம் புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் வசதியினை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, புதுப்பித்தலுக்கான சான்றிதழ்களை 6 தொழிலாளர்களுக்கும், கல்வி, திருமணம் மற்றும் விபத்து மரண உதவித் திட்டங்களின் கீழ் 4 தொழிலாளர்களுக்கும் உதவிகளை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்காக தமிழக தொழிலாளர் நலத் துறையின் கீழ் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கிவருகின்றன.
கரோனா வைரஸ் நோய் சமூக பரவலை தடுக்கும் பொருட்டும், தனி மனித இடைவேளையை பராமரிக்கும் பொருட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்வதற்கும், பதிவினை புதுப்பித்தல் செய்வதற்கும், கல்வி, மகப்பேறு, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளின் கேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கும் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகங்களுக்கு நேரடியாக செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இந்த சிரமத்தை போக்கும் விதமாக முதற்கட்டமாக அமைப்புசாரா தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே இணையதளம் மூலம் https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 17 வாரியங்களிலும் உறுப்பினர்களாக பதிவு செய்துகொள்ளும் வசதி 19.06.2020 முதல் ஏற்படுத்தப்பட்டு 20.07.2020 முதல் அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.
கட்டுமான தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட 17 வாரியங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பதிவினை புதுப்பித்தல் செய்து கொள்ளும் வசதி, நலத்திட்ட உதவிகளுக்கான கேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் வசதி, திருத்தம் மேற்கொள்ளும் வசதி, மாவட்டங்களுக்கு இடையே உறுப்பினர் பதிவினை மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., தொழிலாளர் ஆணையர் முனைவர் இரா.நந்தகோபால், இ.ஆ.ப., தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர்(பொ) அ.யாஸ்மின் பேகம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.