கரோனா தொற்றைக் கண்டறிய 37 லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட் கருவிகளைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் 1 லட்சத்து 25 ஆயிரம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.
இந்தக் கருவிகள் ஒன்பது இந்திய நிறுவனங்கள் உள்பட 23 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில் சீனாவைச் சேர்ந்த வொண்ட்ஃபோ நிறுவனமும் ஒன்று. இக்கருவிகளை புனேவில் உள்ள தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைக்கு உட்படுத்தாமல், கரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அக்கருவிகளைக் கொள்முதல் செய்ய தடை விதிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் வந்ததால் ரேபிட் டெஸ்டிங் கருவிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தக் கருவிகளை தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பரிசோதனைக்குப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் அவசரகால வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களை பயன்படுத்த தடை கோரி வழக்கு!