சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "அண்ணா பல்கலைக்கழகத்தின் 2020 ஆண்டிற்கான பருவத் தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதினர். ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வில் 25 விழுக்காடு மாணவர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை. சில மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது. 75 விழுக்காடு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இத்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். மாணவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை செயலாளர் உடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இந்த மாணவர்கள் வேலைக்கு செல்வதற்காகவும் உயர் கல்வி செல்லவும் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி ஏற்கனவே தேர்வு எழுத விண்ணப்பிக்காத அரியர் மாணவர்களும் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதலாம். தேர்வு எப்போது நடைபெறும் என்பது பல்கலைக்கழகம் விரைவில் அறிவிக்கும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!