சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் கூடுதல் தொழில்நுட்ப அலுவலராகப் பணிபுரிந்த பாஸ்கர் என்பவருக்கு, கூடுதல் நூலக உதவியாளராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து வீரபாண்டி, செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், எஸ். நக்கீரன் அமர்வில் இன்று (ஜனவரி 4) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "ஒரு காலத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கிவந்த சென்னை பல்கலைக்கழகம், இன்றைக்கு அதன் பெயரை இழந்துவருகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதைப் பெருமையாகச் சொன்ன காலம் போய், இப்போது அதே பெருமை நீடிக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. பல்கலைக்கழகத்தில் நேர்மை, அர்ப்பணிப்புச் சேவையைப் பேணிப் பாதுகாக்காத அலுவலர்களுக்கு எதிராக அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும். பொறுப்பற்ற அலுவலர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்" என்று காட்டமாகத் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில், பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், பாஸ்கருக்கு பதவி உயர்வு வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: Chennai Airport Covid Cases: சென்னை விமான நிலையத்தில் 18 பேருக்கு கரோனா!