சென்னை: பண்ருட்டி அருகே சவ ஊர்வலத்தின்போது சாலையில் வீசப்பட்ட பூ மாலையில் சிக்கி, வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உரிய கட்டுப்பாடு விதிகளை வகுக்காததே இது போன்ற சம்பவத்திற்கு காரணம் என்றும், அதனால் உரிய வழிகாட்டு விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி பண்ருட்டியைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்க பூர்வாலாவுக்கு கடிதம் எழுதினார்.
அன்புச்செல்வனின் கடிதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்க பூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். விசாரணையில், சவ ஊர்வலங்களை எடுத்துச் செல்ல அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமை வழங்கியுள்ளது.
ஆனால், இறுதி மரியாதை ஊர்வலத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. அதனால், சவ ஊர்வலங்களை இனி சாலையில் எடுத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு விதிமுறைகளை வகுப்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: “ஆருத்ரா முறைகேட்டிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” - இன்றும் விசாரணைக்கு ஆஜராகும் ஆர்.கே.சுரேஷ்!