சென்னை: உரிய உரிமங்கள் இல்லாமல் இறைச்சிக் கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராகக் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம் இல்லாமல் இறைச்சிக் கடையில் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதாகக் கூறி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். உணவுக்காக விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும், விதிகளை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதைத் தடுக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்களா? எனத் தெரிவிக்காததில் இருந்து, இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றே கருத வேண்டியிருப்பதாகக் கூறி, விதிகளை நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
விதிகளை நடைமுறைப்படுத்தாத அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்ப, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்துள்ளார்.
இதையும் படிங்க: கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து காலமானார்