தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன், டெங்கு காய்ச்சல் பரவி வரும் நேரத்தில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது, ஏழை மக்களை பாதிக்கச் செய்யும் என்பதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, அரசு மருத்துவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடவுளுக்கு அடுத்தபடியாக கருதப்படும் மருத்துவர்கள், ஏழை மக்களுக்கு சிகிச்சை வழங்க முடியாது என்று எப்படி மறுக்க முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
மேலும், குப்பைகள் அகற்றப்படாததால் தான் டெங்கு நோய் பரவுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், முதலமைச்சர் வீட்டுக்கு அருகில் மலைபோல குப்பைகள் குவிந்து கிடப்பதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும் முதலமைச்சர் வீட்டருகிலேயே இந்த நிலை என்றால், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் எனவும் கூறினர்.
இதையடுத்து டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த வழக்கு, இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: முதலீடுகளை மேம்படுத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!