திமுக மீது திட்டமிட்டுப் பொய்ச் செய்தியை பாஜக பரப்புவதாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், “உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசியல் எல்லைகள் கடந்து அனைவரும் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். ஆனால், இந்த இக்கட்டான நேரத்திலும், திமுக மீது அவதூறு பரப்பி அதன் மூலம் ஏதாவது அரசியல் லாபம் அடையலாமா எனத் தமிழ்நாடு பாஜக செயல்பட்டுவருகிறது.
திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய், திமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை வழங்கியுள்ளதோடு, தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் பணத்தை ஒதுக்கியுள்ளனர்.
அதோடு, திமுக தலைமை நிலையமான 'அண்ணா அறிவாலயத்தின்' வளாகத்தில் அமைந்துள்ள 'கலைஞர் அரங்கை' கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வழங்கியுள்ளது. திமுக நிர்வாகிகளும் தங்களால் இயன்ற உதவிகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிவருகின்றனர்.
இவை அனைத்தையும் 'முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது' போல், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு திமுக எதுவுமே செய்யவில்லை எனத் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக அவதூறு பரப்பிவரும் பாஜக கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான 'தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு' 100 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன், ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாகி, ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி.,யின் சார்பாக, வழக்குரைஞர் ரிச்சர்ட்சன் வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய திமுக எம்.பி.!