சென்னை திருவொற்றியூர் எண்ணுார் விரைவுச் சாலையில் சுமார் 48 டன் மதிப்புள்ள பேப்பர் ரோல் கொண்ட கண்டெய்னர் ஒன்று மஸ்தான் கோயில் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, நிலைதடுமாறிய கண்டெய்னர் பயங்கர சத்தத்துடன் குடியிருப்புப் பகுதி அருகே கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போக்குவரத்து காவல் துறையினர் துறைமுகத்துக்குச் செல்லக்கூடிய கண்டெய்னர் லாரிகளை மாற்றுப்பாதையில் இயக்கவைத்து அப்பகுதியில் போக்குவரத்தை சீர்செய்தனர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் எண்ணுார் விரைவுச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர். கண்டெய்னர் லாரி செல்லும் சாலையை நெடுஞ்சாலைத் துறை சரியாக பராமரிக்கவில்லை எனப் புகார் கூறிய மக்கள், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.