கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உதவக்கூடிய வகையில் இயந்திரப் படிவம் ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்து வழங்கியுள்ளது.
ஏ.யு. மிட் போட் (AU MIT BOT) என இந்த இயந்திரப் படிவத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது வைஃபை (Wifi) வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரப் படிவத்தை 500 மீட்டர் தொலைவிலிருந்து இயக்க முடியும். நோயாளிகளின் உடல்நிலையைக் கண்காணிப்பது அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்துகளைக் கொண்டு செல்வது, கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த இயந்திரப் படிவத்தைப் பயன்படுத்த முடியும்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், உணவு வழங்கிடவும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட நபர்களின் அருகில் அதிகம் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் அவர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை உள்ளது. இதனைத் தவிர்க்கவே இயந்திரப் படிவத்தை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஆட்டோமொபைல் துறை, உற்பத்தியியல் துறை, மின்னணு தொடர்பியல் துறையைச் சேர்ந்த குழுவினர் தயாரித்துள்ளனர்.
![Anna University manufactures robot for corona patients](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7402727_575_7402727_1590810401955.png)
மெட்ராஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் இந்த இயந்திரப் படிவத்தைத் தயாரித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க... கரோனா நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் ரோபோ - மதுரையில் அறிமுகம்