சென்னை: கோடம்பாக்கம் நம்பியார் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (60). மூதாட்டியான தனலட்சுமி நேற்று (ஜூலை.02) அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு கர்ணன் தெரு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பத்திரப்படுத்துவதாகக் கூறி நகை திருட்டு
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், வழியில் ஒரே சண்டையாக உள்ளதால் நகைகளைக் கழற்றி கைப்பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்லுமாறு தனலட்சுமியிடம் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய தனலட்சுமி தாலி, வளையல், செயின் என ஆறு சவரன் நகைகளை கழட்டியுள்ளார். பின்னர் நகைகளை வைக்க பை இல்லாததால், கைக்குட்டையில் சுருட்டித் தருவதாக இருவரும் கூறியுள்ளனர். அதன்படி தனலட்சுமி நகைகளை கழற்றிக் கொடுக்க, அதனை இருவரும் கைக்குட்டையில் மறைத்து கொடுத்துள்ளனர்.
பின்னர் மூதாட்டி வீட்டிற்கு சென்று கைக்குட்டையை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் கற்கள் இருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மந்திரம் ஓதி, மயக்க மருத்து தெளித்து திருட்டு
இதேபோல், புளியந்தோப்பு நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் தௌலத். இவரது மகள் ஆசிபா. நேற்றிரவு வீடு அருகே இஸ்லாமிய முறைப்படி மந்திரம் ஓதிக்கொண்டு வந்த 50 வயது நபரிடம் பணம் அளித்து ஆசிர்வாதம் பெறுவதற்காக ஆசிபா சென்றுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத அந்த நபர், ஆசிபாவின் நேரம் சரியில்லை எனக்கூறி தலையில் கைவைத்து, மந்திரம் ஓதி தண்ணீர் போன்ற திரவத்தை தெளித்துள்ளார். உடனே ஆசிபா மயங்கி கீழே விழ, அவரிடம் இருந்து தங்க வளையல் உள்ளிட்ட ஆறு சவரன் நகைகளை அந்த அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்றார்.
இதுகுறித்து புளியந்தோப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் இரு வேறு இடங்களில் பெண்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடித்தச் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இதையும் படிங்க: நண்பரின் காதை கடித்து துப்பியவர் கைது!