சென்னை: சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டுவசதித்துறையின் மானிய கோரிக்கை விவாதத்தின் முடிவில் அமைச்சர் சு.முத்துச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையுடன் கலந்தாலோசித்து மெரினா முதல் கோவளம் வரையிலான சுமார் 30 கி.மீ நீளமுள்ள கடற்கரைப் பகுதியில், மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கப் பணிகள் ரூ.100 கோடி மதிப்பில் சென்னை பெருநர வளர்ச்சிக்குழுமத்தால் செயல்படுத்தப்படும்’’ என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, வீட்டுவசதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, "சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடற்கரை நகரான சென்னையின் கடற்கரைப்பகுதி எண்ணூர் முதல் கோவளம் வரையில் நீண்டுள்ளது. இது இயற்கையான நீண்ட கடற்கரைப்பகுதியாகும். இந்த கடற்கரைப்பகுதியை பருவகால மாற்றத்தின் அடிப்படையில் பாதுகாக்க வேண்டும்.
இதில் குறிப்பாக மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகள் மக்கள் அதிகளவில் பொழுதுபோக்குக்காக கூடும் பகுதிகளாகும். இதுதவிர, மேலும், 20 பகுதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். அதேநேரம், கடல் அரிப்பு மற்றும் மண் குவியல் இந்த கடற்கரைப்பகுதிகளில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக 3 கி.மீ பகுதியானது கடல் அரிப்பாலும், 7 கி.மீ பகுதிகள் மண் குவியலாலும் பாதிக்கப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டுவசதித்துறையின் கீழ், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தால், சென்னை கடற்கரைப்பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கம் (சிஎஸ்ஆர்ஆர்) என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தற்போது மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்பகுதி ரூ.100 கோடியில் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, இப்பகுதியில் மரத்தாலான நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. மேலும் மக்கள் பங்களிப்பின் அடிப்படையிலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த தனித்துவமான நிர்வாக அமைப்புடன் கூடிய சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்கவும் பரிந்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் செயலரும் சிறப்பு நோக்கு அமைப்பு உருவாக்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைத்தார். இவற்றை கவனமாக பரிசீலித்த தமிழ்நாடு அரசு, ரூ.100 கோடியில் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்க முன் அனுமதியளித்துள்ளது.
அந்த சிறப்பு நோக்கு அமைப்பில், வீட்டுவசதித்துறை செயலரை தலைவராகவும், வனத்துறை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், டுபிட்கோ தலைவர் உள்ளிட்ட 15 பேரை உறுப்பினர்களாகவும், பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலரை தலைமை செயல் அதிகாரியாகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளது. திட்டத்துக்கான ஒப்பந்தம் கோருதல் உள்ளிட்ட பணிகளை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர் மேற்கொள்வார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பள்ளிக்கூடம் மதிப்பெண் கூடமாக இல்லாமல் மதிப்புயர் கூடமாக மாற வேண்டும்' - மு.க.ஸ்டாலின்