தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அண்மையில் கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் கரோனா சிகிச்சைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களை திறந்து வைத்தார்.
இந்நிலையில், இன்று (மே.25) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஹெச்எல்எல் பயோடெக் (HLL Biotech) நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வுக் கூடத்தை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
![ஹெச்எல்எல் பயோடெக் ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20210525-wa0026_2505newsroom_1621952478_28.jpg)
இந்த ஆய்வின்போது, கரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் நிறுவனமான ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்துக்கு உற்பத்தியைத் தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, அதனைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
![ஹெச்எல்எல் பயோடெக் ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20210525-wa0025_2505newsroom_1621952478_953.jpg)
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் விஜயன், தொழில்துறை முதன்மைச் செயலர் முருகானந்தம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.