இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவருகிறார். இந்திய அணியின் ஒப்பற்ற விக்கெட் கீப்பரான தோனியின் ஓய்வுக்குப்பின் அந்த இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருபுறம் தோனியின் ஓய்வு எப்போது என பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அவரது இடத்தை நிரப்புவதற்காக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு பிசிசிஐ தொடர்ந்து அதிக வாய்ப்புகளை வழங்கிவருகிறது. இதனிடையே தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 207 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த இந்திய அணி வெற்றிபெற்றது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய கோலி, மைதானத்தில் இளம் வீரர் ரிஷப் பந்த் ஏதேனும் தவறு இழைத்தால், அச்சமயத்தில் தோனி... தோனி என கத்துவது மரியாதை இல்லாத விஷயம் என்றார். மேலும் இதுபோன்ற தருணங்களில் இளம் வீரருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனியார் பத்திரிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி ரிஷப் பந்திற்கு கோலி ஆதரவு அளித்தது குறித்து தனது கருத்தை பதிவு செய்தார். அவர் கூறியதாவது, நான் கோலியின் இடத்தில் இருந்திருந்தால் தோனி தோனி என்று மைதானத்தில் எழும் சத்தத்தை பந்தை தொடர்ந்து கேட்க வைத்து, அதிலிருந்து அவரை பாடம் கற்க வைத்திருப்பேன் என்றார்.
மேலும், தோனி போன்று ஒருவர் எப்போதும் அணியில் இருப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட கங்குலி, தோனி ஆரம்பக் காலத்தில் இப்போதுள்ள தோனியாக இல்லை. அவர் இந்த நிலையை அடைய அவருக்கு 15 ஆண்டுகள் ஆனது. எனவே ரிஷப் பந்த் தோனியின் நிலையை அடைய அவருக்கும் 15 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்தார்.
முன்னதாக வங்கதேச அணிக்கு எதிராக கடந்தமாதம் நடைபெற்ற டி20 தொடரின் போது, ரிஷப் பந்த் சில தவறுகளை செய்தபோது மைதானத்தில் இருந்ந ரசிகர்கள் தோனி தோனி என்று கத்தத் தொடங்கினார். அதன் காரணமாகவே கோலி ரிஷப் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.