'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் 'சூரரைப்போற்று'. இப்படத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நடிகர் சூர்யாவும், குனீத் மோங்காவும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
ஏர் டெக்கான் என்ற விமான நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட படமாக சூரரைப்போற்று தயாராகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி நேரடியாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'சூரரைப்போற்று' படம் ஓடிடி தளத்தில் வெளியாவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இயக்குநர் ஹரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஹரியின் அறிக்கை அதில், "உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள். ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் இல்லை. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு திரையரங்கில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்கள்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம். சினிமா என்னும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கின்ற கோயில் இருந்தால்தான் அதற்கு மரியாதை, படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்பிற்கும் ஒரு அங்கீகாரம். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்" என்று அந்த அறிக்கையில் ஹரி தெரிவித்துள்ளார்.