இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், இயக்குநர் பாக்யராஜ், நடிகர் பிரபு, நடிகர் அர்ஜுன், நடிகை சச்சு, கலைப்புலி தாணு, கவிஞர் பா. விஜய், மகாலிங்கம், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி இணைந்து வரவேற்புரை ஆற்றினர். எடிட்டர் மோகன் எழுதிய 'தனிமனிதன்' புத்தகத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட நடிகர் அர்ஜுன் பெற்றுக் கொண்டார். வரலட்சுமி மோகன் எழுதிய 'வேலியற்ற வேதம்' புத்தகத்தை ஷோபா சந்திரசேகர் வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.
விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில்,
''நானும் எடிட்டர் மோகன் மாதிரி சினிமாவில் சாதிப்பதற்காக சென்னைக்கு வந்தவன் தான். ஆனால், அவர் மதுரையில் இருந்து நடந்தே சென்னைக்கு வந்தார். நான் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் திருட்டு ரயிலில் வந்தேன். அவர் பாண்டிபஜாரில் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கினார். நானும் அதேபோன்று அதே இடத்தில் படுத்து உறங்கினேன்.

எடிட்டர் மோகன் குடியிருந்த வீட்டின் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலித்தார். நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் பெண்ணை காதலித்தேன். அவருடைய திருமணம் மாதிரி எனக்கும் மதம் மாறிய காதல் திருமணம்தான். என் மகனை நான் நடிகனாக்கினேன். மோகன் இயக்குநராக்கியிருக்கிறார். இதுபோல எனக்கும் அவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்பதை, அவருடைய புத்தகத்தைப் படித்து தெரிந்து கொண்டேன். அதிலும் எனக்குப் பிடித்த வரிகள் வரலட்சுமியை வரம் என்று குறிப்பிட்டது' என்றார்.
விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில்,
''சினிமாவில் நான் நேசிக்கும் மரியாதைக்குரிய மனிதர் எடிட்டர் மோகன். இந்தப் புத்தகத்தில் அவர் மதுரை திருமங்கலத்திலிருந்து நடந்தே வந்தார் என்று எழுதியதைப் படித்தப் பிறகு, இன்னமும் என் மனதில் அது தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பிள்ளைகளைப் பெற்றோர் முன்னேற்றுவதும், பெற்றோருக்குப் பிள்ளைகள் கடமை ஆற்றுவதும் இப்படி ஒரு குடும்பம் அமைவதும் மிக அரிது மற்றும் பெருமைக்குரியது'' என்றார்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில்,
'' 'தனிமனிதன்', 'வேலியற்ற வேதம்' புத்தகங்களை முழுமையாகப் படித்தேன். இந்தப் புத்தகம் ஆங்கில புத்தகத்தைவிட சிறப்பாக இருக்கிறது. வறுமையில் வாழ்ந்த மோகனின் வாழ்க்கை இன்று வளமாக இருக்கிறது. இதற்குக் காரணம் அவருடைய கடின உழைப்பும், விடா முயற்சியும் தான். முடியும் என்று கூறி சாதனையாளராக உயர்ந்திருக்கும் மோகனின் வாழ்க்கையே அனைத்து இளைஞர்களுக்கும் உதாரணம். அந்த காலத்திலேயே இருவீட்டார் சம்மதத்துடன் மதம் மாறி, திருமணம் செய்து கொண்டவர்கள் தான் மோகன் – வரலட்சுமி தம்பதிகள். இன்று அவர்களுடையப் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்திருக்கிறார்கள். நல்ல நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்றார்.
நடிகர் பிரபு பேசுகையில்,
'' என் அப்பா அவரை முன்னேற்றியவர்களைப் பற்றி இறுதி மூச்சுவரை பேசிக் கொண்டிருந்தார். அதேபோல், எடிட்டர் மோகனும் 'தனிமனிதன்' புத்தகத்தில் அவரின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்தவர்களை மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார். சினிமாவைக் காதலிப்பவர்கள் எடிட்டர் மோகன் குடும்பத்தார்கள். கடுமையான உழைப்பாளர்கள்'' என்றார்.
நடிகர் அர்ஜுன் பேசுகையில்,
'' அப்பா எடிட்டர், அம்மா இரட்டை எம்.ஏ., பட்டம் பெற்றவர், மூத்த மகன் இயக்குநர், இளைய மகன் நடிகர் என்ற சிறந்த குடும்பத்தின் சிறப்பான விழா. நான் நடித்த தெலுங்கு படம் ஒன்று மாபெரும் வெற்றி பெற்றது. அதற்காக பேசிய ஊதியத் தொகைக்கும் மேலாக எனக்கு மோகன் கொடுத்தார். அவரின் பண்பைக் கண்டு நான் வியந்தேன்'' என்றார்.
இதையும் படிங்க: மலையாளத்தில் புதைந்துள்ள ‘தமிழ்’ வார்த்தைகள்... - இயக்குநர் ராம் சொல்வது என்ன?