தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான 'சிலம்பாட்டம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சனா கான். இப்படத்திற்குப் பின் 'தம்பிக்கு எந்த ஊரு', 'பயணம்' உள்ளிட்ட சில படங்களில் சனா கான் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது இவர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், இந்தியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 6ஆவது சீசனில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமடைந்தார். அதன்பின் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தொடர்களிலும் நடித்து வந்தார்.
கடந்த வருடம் மெர்வின் லூயிஸ் என்பவரைக் காதலித்து வருவதாக சனா கான் புகைப்படங்கள் பகிர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அவரைப் பிரிந்துவிட்டதாகக்கூறி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சனா கான் முன்வைத்தார்.
இந்நிலையில், திரையுலகிலிருந்தும் பொழுதுபோக்குத்துறையில் இருந்தும் விலகுவதாக கடிதம் ஒன்றை எழுதி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக சனா கான் தற்போது அறிவித்துள்ளார்.
இது குறித்து சனா கான் கூறியிருப்பதாவது, "சகோதர சகோதரிகளே இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தில் நான் இருக்கிறேன்.
பல வருடங்களாக நான் திரைத்துறையில் இருக்கிறேன். திரைத்துறையில் நான் இருந்த காலகட்டம் வரை எனக்கு நிறைய புகழும் பெருமையும் செல்வமும் ரசிகர்களிடமிருந்து கிடைத்துள்ளன. அதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.
ஆனால் கடந்த சில நாள்களாக உணர்தல் என்னை ஆட்கொண்டுள்ளது. இதில் மனிதன் தோன்றிய நோக்கம், பணத்தையும் புகழையும் துரத்துவதற்காகவா? மனிதன் தன் வாழ்க்கையைத் தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது வாழ்க்கை கடமையில் ஒரு அங்கம் இல்லையா?
ஒரு நபர், தான் எப்போது வேண்டுமானாலும் இறந்து போகலாம் என்பதையும், அவர் இறந்த பிறகு அவருக்கு என்ன ஆகும் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டாமா? இந்தக் கேள்விகளுக்கு நான் நீண்ட காலமாக பதில் தேடி வருகிறேன். அதுவும் குறிப்பாக என் மரணத்திற்குப் பிறகு என்ன ஆகும் என்ற கேள்விக்கு விடை தேடுகிறேன்.
எனது மதத்தில் இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது, பூமியில் இந்த வாழ்க்கையே மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையை மேம்படுத்த தான் என்பதை உணர்ந்தேன்.
தன்னைப் படைத்தவனின் ஆணைக்கேற்ப இந்த அடிமை வாழ்க்கை, பணம், புகழை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொள்ளாமல் இருப்பது சிறப்பாக இருக்கும். மனிதன் பாவப்பட்ட வாழ்க்கை வாழ்வதைத் தவிர்த்து மனித இனத்துக்கு சேவை செய்ய வேண்டும். இறைவன் காட்டும் பாதையை பின்பற்ற வேண்டும்.
எனவே இன்று நான் ஒரு விஷயத்தை அறிவிக்கிறேன். இன்றிலிருந்து எனது திரைத்துறைக்கு அது தொடர்பான வாழ்க்கை முறைக்கு நிரந்தரமாக விடை கொடுக்கிறேன். என்னை படைத்தவனின் ஆணைகளைப் பின்பற்றி மனித இனத்துக்கு சேவை செய்ய நான் முடிவு செய்துள்ளேன்.
அனைத்து சகோதர சகோதரிகளும் எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவர் எனது மனம் திரும்புதலை ஏற்க வேண்டும். நான் எடுத்திருக்கும் இந்த முடிவிற்கு இணக்கத்துடன் வாழவும் அதற்கான மன உறுதியும் தரவேண்டும்.
எனவே இனி பொழுதுபோக்குத் துறை தொடர்பான எந்தவிதமான வேலைகளுக்கும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்" என்று கூறியுள்ளார்.