நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் பகத் ஓரான்(27), தனது மனைவி சுமதி(24), ரேஷ்மா (4), அபய் (8) என்ற இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்தார்.
இந்நிலையில், இன்று (ஜன. 7) காலை அசோக் பகத் ஓரானின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்ததால், அருகில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொலக்கம்பை காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது சுமதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். மேலும், வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் ரேஷ்மாவின் உடலும், தலையில் பலத்த காயத்துடன் அபய்யின் உடலும் கண்டெடுக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, அசோக் பகத் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து உடல்கள் கைப்பற்றி குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிங்க...6 வயது குழந்தைக்கு வெற்றிகரமாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை