"நீண்ட நாட்களாக அமேசானில் எரியும் தீயின் புகை எங்கோ இருக்கும் நமது கண்ணில் நீர் வரச் செய்யாது; நம்மை வேர்வையில் நனைத்திடாது எனப் பலரும் கண்டுகொள்ளாமல் அவரவர் பணியைப் பார்க்கும் சூழலில் உலக அழிவு என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை அது கண்முன்னே நிறுத்தும்" என சி.என்.என். ஆய்வுக் கட்டுரை ஒன்று எச்சரித்துள்ளது.
அமேசான் காடுகள் எரிவதன் தாக்கத்தை நேரில் கண்ட செய்தியாளர் நிக் படன் வால்ஷ், அமேசான் பற்றியெரிவதால் வனாந்தரத்தின் இயற்கைச் சூழல் மற்றும் ஈரத்தன்மை பாதிக்கப்பட்டு வறட்சியைக் கொண்டுவருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தின் இந்த எச்சரிக்கையை நிராகரித்து, பூமியைப் புரிந்துகொள்ளாமல் அதன் இருப்புத்தன்மைக்கு இறுதிக் கால அட்டவணையை மனிதர்கள் வகுத்துவருவதாகவும் வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார். அழகிய அமேசானில் உயிரினங்கள் கருகுவது, இயற்கை பேரழிவைச் சந்திப்பதைக் காண்பது என்பது இதுவரை கற்பனையிலும் காணாத வேதனை என அவர் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
![The Amazon is burning The climate is changing we're doing nothing to stop it அமேசான் எரிகிறது காலநிலை மாறுகிறது மக்களிடம் எந்த தாக்கமும் இல்லை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4342983_amazon.jpg)
உலகத்துக்குப் பேராபத்து விளைவிக்கும் செயல் வெகு வேகமாக நடப்பதாகவும், அதற்குப் பிரேசில் மக்கள், பணத்துக்காகக் காடுகளை எரிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்ட விவசாயிகள், அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனரோவை மட்டும் குற்றம்சாட்ட முடியாது என்று குறிப்பிட்ட அவர், அமேசான் பகுதியில் விளையும் சோயா, பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகளின் இறைச்சி, அங்கிருந்து வெட்டி எடுக்கப்படும் மரத்தைப் பயன்படுத்துவோர் என அனைவருமே இந்த அவலத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
விவசாயம் பொய்த்து, சுத்த குடிநீரானது கச்சா எண்ணெய்யை விட மோசமாகிப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்று, தவிர்க்க முடியாத பருவநிலை மாற்றத்தால் கொத்துக் கொத்தாக மக்கள் செத்துமடியும்-போதுதான் வேதனைத் தெரியும் எனச் சுட்டிக் காட்டியுள்ளார். நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்யாததும், மரங்களை வளர்க்காததும் மனிதக் குலத்தின் அழிவுக்கே வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.