சென்னை: விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள “உலகம்மை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை கோடம்பாக்கத்தில் இளையராஜாவின் இசைக்கூடத்தில் நடைபெற்றது. சமுத்திரம் என்பவர் எழுதிய “ஒரு கோட்டுக்கு வெளியே” என்ற நாவலைத் தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுப்பேசினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜாவும் பாரதிராஜாவும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் மேடையில் வெகுவாகப் பாராட்டியும் , பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தும் கேலி செய்தும் பேசினர்.
![ulagammai movie song release ulagammai movie ulagammai movie song release function ilayaraja in ulagammai movie song release function ilayaraja and bharathiraja உலகம்மை திரைப்படம் உலகம்மை படத்தின் இசை வெளியீட்டு விழா உலகம்மை இசை வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா பாரதிராஜா மற்றும் இளையராஜா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-ilayaraja-bharathiraja-script-7205221_06042022150715_0604f_1649237835_639.jpg)
பேசப்பட்ட இசை: முதலில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “இளையராஜாவைப் பற்றி பேசாமல் நிகழ்ச்சி நிறைவு பெறாது. சூரியன் போன்றவன் இளையராஜா. எவ்வளவுதான் அவனைப் பற்றி பேசுவது. இதுவரை பேசப்பட்ட எனது படங்களில், நான் எடுத்த காட்சியைவிட அவன் அமைத்த பின்னணி இசைதான், காட்சி மேம்படக் காரணம்.
இளையராஜாவின் ஐந்து விரல்களில் ஐந்து சரஸ்வதி இருக்கும். நாங்கள் நாடகங்களில் நடித்தபோது என்னை இளையராஜா வசனம் பேசவே விடமாட்டான். என்னை எவ்வளவு வாரிவிட வேண்டுமோ, அவ்வளவு வாரி விடுவான். இன்றுவரை வாரிவிடுகிறான். எந்த வரியை யார் எழுதினாலும் இளையராஜா இசை அமைத்தால் அதற்கு உயிர் கிடைக்கும். நான் பாட ஆரம்பித்தால் இளையராஜா ஓடிவிடுவான்” என்று நையாண்டியாக கூறினார்.
பலரை உருவாக்கிய பாரதிராஜா: இதனைத் தொடர்ந்து பேசிய இளையராஜா, “அல்லி நகரத்தில் நாடகம் நடிக்கும்போது பாரதிராஜா மேடையில் நடித்துக்கொண்டிருப்பார். நான் கீழே அமர்ந்து ஹார்மோனியம் இசைப்பேன். அப்போது என்னுடைய சட்டையை வலுக்கட்டாயமாக வாங்கி பாரதிராஜா போட்டுக்கொள்வார். மறுநாள் அந்த சட்டையை சாலையில் போட்டு சென்றால் அதை பாரதிராஜாவின் சட்டை என்று நினைத்துவிடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கும்.
சினிமாவில் இயக்குநர், உதவி இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பலரையும் கொண்டுவந்தவர், பாரதிராஜா. இன்று சினிமாவில் இருக்கும் பெரும்பாலானோர் பாரதிராஜாவின் ஆட்கள்தான். நான் இந்தப் படம் பண்ணி கொடுக்க ஒப்புக்கொண்டதே படக்குழுவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான்” என்று கூறினார்.
![ulagammai movie song release ulagammai movie ulagammai movie song release function ilayaraja in ulagammai movie song release function ilayaraja and bharathiraja உலகம்மை திரைப்படம் உலகம்மை படத்தின் இசை வெளியீட்டு விழா உலகம்மை இசை வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா பாரதிராஜா மற்றும் இளையராஜா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14946036_ilba.jpg)
இளையராஜாவுக்கு புகழாரம்: இதனைத்தொடர்ந்து பேசிய ஆர்.கே. செல்வமணி, “30 ஆண்டுகளாக இளையராஜாவை பார்த்து பயந்துதான் நின்றோம். இப்போதுதான் அவருடன் சிரிக்கிறோம். 'கேப்டன் பிரபாகரன்' படப்பிடிப்பு ஆண்டிபட்டியில் நடந்தது. அப்போது ஒரு பாடல் இசை சரியாக இல்லை என்று இளையராஜாவிடம் தயக்கத்துடன் போனில் கூறினேன். அடுத்த நாள் காலைக்குள் இசையமைத்து மதியம் ரயில் மூலம் எங்களுக்கு இசைப்பதிவை அனுப்பி வைத்தார். “ஆட்டமா..தேரோட்டமா..பாடல்தான்” அது.
![ulagammai movie song release ulagammai movie ulagammai movie song release function ilayaraja in ulagammai movie song release function ilayaraja and bharathiraja உலகம்மை திரைப்படம் உலகம்மை படத்தின் இசை வெளியீட்டு விழா உலகம்மை இசை வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா பாரதிராஜா மற்றும் இளையராஜா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14946036_rk-selvamani.jpg)
செம்பருத்தி படத்தின் ஒன்பது பாடலுக்குமான இசையையும், 45 நிமிடங்களில் முடித்துக்கொடுத்தார் இளையராஜா. பலரை இயக்குநர், தயாரிப்பாளர் ஆக்கியது இளையராஜா. 'புலன் விசாரணை' படத்தில் சில மாறுதல்களை செய்யுமாறு என்னிடம் இளையராஜா கூறினார். படத்தின் கிளைமாக்சில் இடம்பெற்ற சண்டைக் காட்சி பெரியளவில் பேசப்படதற்கு இளையராஜாதான் காரணம். “Silence is also a music” என்று கூறுவார் இளையராஜா” ' என இளையராஜாவுக்கு புகழாரம் சூடினார்.
குழந்தைப் போன்றவர் இளையராஜா: பின்னர் கவிஞர் முத்துலிங்கம் பேசுகையில், “நான் முதல் பாட்டு எழுதியது 1973ஆம் ஆண்டு வெளிவந்த “பொன்னுக்கு தங்க மனசு” என்ற படத்தில் தான். இளையராஜா அமைத்த மெட்டில்தான் அந்த படத்தில் எனது முதல் பாடல் உருவானது. இளையராஜா இசையில் நான் எழுதிய முதல் பாடல் “கிழக்கே போகும் ரயில்” படத்தின் “மாஞ்சோலைக் கிளிதானோ” பாடல். 1978-79-ல் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாக அது தேர்வானது.
![ulagammai movie song release ulagammai movie ulagammai movie song release function ilayaraja in ulagammai movie song release function ilayaraja and bharathiraja உலகம்மை திரைப்படம் உலகம்மை படத்தின் இசை வெளியீட்டு விழா உலகம்மை இசை வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா பாரதிராஜா மற்றும் இளையராஜா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14946036_muthulingam.jpg)
இதுவரை 1700 பாடல்கள் எழுதியுள்ளேன். இந்தியாவிலேயே இசைப் புலமையுடன், இலக்கிய இலக்கணப் புலமையும் உள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜாதான். வெளியில் இருந்து பார்க்க எப்படி தெரிந்தாலும், நெருங்கிப் பழகினால் குழந்தை போன்றவர் இளையராஜா” என்று கூறினார்.
இதையும் படிங்க: ' திரைக்கதை எழுதுபவர்களுக்கு ஏற்றது ஓடிடி தான்...' - வெற்றிமாறன்