ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள தொட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வி. இவர் அக்ரஹாரம் பகுதியிலுள்ள தோல் பதனிடும் ஆலையில் அலுவலராக பணியாற்றிவந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி வேலை முடித்துவிட்டு சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த நபர்கள் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 8 1/4 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். அதனைத் தடுக்க சத்தம் போட்ட திருச்செல்வியின் நாக்கு, உதடு, காது உள்ளிட்ட இடங்களில் கத்தியால் கிழித்து சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த திருச்செல்வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று(பிப்.10) அக்ரஹாரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரின், இருசக்கர வாகனத்தில் வந்த வீரப்பன் சத்திரத்தைச் சேர்ந்த சாம்சன் என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிவன்பாண்டி, கார்த்திக், முகமது நசீர், சக்திவேல் ஆகியோருடன் இணைந்து சாம்சனுக்கு, அக்ரஹாரத்தில் நடந்த தங்க சங்கிலி பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 8 1/4 பவுன் தங்க சங்கிலி, இரண்டு இருச்சக்கர வாகனங்கள், இரண்டு கத்தி உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தங்க சங்கிலி வழக்கு தொடர்பாக 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
இதையும் படிங்க: லிஃப்ட் கேட்டு வாகனங்களைத் திருடி செல்லும் நூதன திருடன் கைது!