தமிழ்நாடு அரசு மதுபான கடைகளைத் திறந்து கொள்ள அனுமதி அளித்ததையடுத்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. மதுரை செல்லூரில் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டின் அருகே அமைந்துள்ள மதுபான கடை ஒன்றை, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டனர்.
இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட அந்த கடையில் காலை முதல் மதுபான விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு, கடையை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்திற்குப் பிறகு, கடையை இழுத்து மூட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்லூர் காவல் துறையினர் மற்றும் மாநகர காவல்துறை துணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் முற்றுகையிட முயன்ற பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இடையில் சிறிது நேரம் காவலர்களுக்கும் பெண்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடையைத் தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு, காவல் துறை வேண்டுகோளை ஏற்று பெண்கள் கலைந்து சென்றதையடுத்து, மீண்டும் கடை திறக்கப்பட்டு மதுபான விற்பனை நடைபெற்றது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு - அறவழியில் போராடிய கே.என். நேரு