மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில், ஆண்டுதோறும் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, அவனியாபுரத்தில் வருகிற 14 ஆம் தேதியும், பாலமேட்டில் 15 ஆம் தேதியும், அலங்காநல்லுரில் 16 ஆம் தேதியும் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 50 சதவீத பார்வையாளர்கள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது. இதில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை நடந்தப்பட்டது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளின் உரிமையாளர்கள் இன்று பதிவு செய்து அதற்கான டோக்கன்களை பெற்றனர். காலை இந்தப் பணி தொடங்கியதுடன் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கரோனா பரிசோதனையும் நடைபெற்றது. இன்று ஒரே நாளில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பதிவுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் அவ்வப்போது தடியடி நடத்தினர். இதனால் பலர் காயமடைந்தனர்.
இதனிடையே, டோக்கன் வழங்குவதில் பெரும் குளறுபடி நடந்துள்ளதாக காளை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்றிரவு முதல் காத்திருந்தவர்கள் வரிசையில் நின்று உள்ளே சென்ற போது, 200வது வரிசையிலிருந்து டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாகவும், பணம் உள்ளவர்களுக்கும், ஆளுங்கட்சியினறுக்கும் டோக்கன் வழங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக காளைகளை களத்தில் இறக்கும் பெண்கள் உள்ளிட்ட பலரும், மிகுந்த சிரமத்துடன் டோக்கன் பெற்றுச் செல்வதாகவும், இச்சூழலில் டோக்கன் பெற்றாலும் போட்டியில் அனுமதிக்கப்படுவோமா என்று சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டி ஆட்டுச்சந்தையில் அமோக விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி!