தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என்பதை தாமதமாக அறிவித்ததால் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து பேசினார். இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ” அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில ஏதுவாக 7.5% இடஒதுக்கீடு அறிவித்து நடைமுறையில் உள்ளது. அதன்படி, அதற்கான கலந்தாய்வு 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கான கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தர்ஷினி, இலக்கியா என்ற இரு மாணவிகளுக்கு கட்-ஆஃப் படி தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், ரூ.5 லட்சத்திற்கும் மேல் கட்டணம் என்றதால், அவர்கள் அவகாசம் கேட்டுள்ளனர். ஆனால், அதனை ஏற்காததால், அம்மாணவிகளுக்கு அக்கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போயுள்ளது.
இந்நிலையில், கட்டண செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் அடுத்த நாளான 20 ஆம் தேதி அறிவித்ததால், இந்த இரு மாணவிகளின் மருத்துவக்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிட முயன்றபோதும் அனுமதி அளிக்கப்படவில்லை. இது ஏழை மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல், பணக்காரர்களுக்கான ஆட்சியாக இருக்கிறது “ எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய பாதிக்கப்பட்ட மாணவிகள், மருத்துவம் தான் தங்களது கனவு என்றும், எனவே, அரசின் செலவு ஏற்பு குறித்து அறியாத தங்களுக்கு முதலமைச்சர் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மருத்துவப் படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணாக்கருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்'