சென்னை:PMK will face 2026 Tamilnadu election as solo: 2026ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையிலான தனி அணி அமைக்கப்பட்டு தேர்தலை சந்திப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் சித்தானந்த சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில், பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் கோ.க.மணி, பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.த.அருள்மொழி, பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர் .
அதே போல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 5000 வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு
மேலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு பெற சட்டப்போராட்டம் நடத்த பாமக உறுதி ஏற்க வேண்டும், அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
பெண்கள் திருமண வயது 21 என்கிற சட்டத்திருத்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 17 சிறப்பு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
2026 தேர்தலில் தனித்துப் போட்டி
பொதுக்குழுவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் எனக் கூறினார்.
பாமகவின் தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி இருக்கும் எனவும் நகர்ப்புற பேரூராட்சி தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் பாமக போட்டியிடும் எனத் தெரிவித்தார்.
மேலும், கட்சியில் உள்ள நிர்வாகிகள் இனி தவறு செய்தால் மன்னிக்கப்பட மாட்டார்கள் எனவும்; அவர்கள் பொறுப்புகள் பறிக்கப்படும் எனவும் ராமதாஸ் எச்சரித்தார்.
இதையும் படிங்க:Handloom Expo: சிறப்பு கைத்தறிக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட திருக்குறள் அச்சிடப்பட்ட புடவைகள்