தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மே.06),வேலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் நகர்ப் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளான அண்ணா சாலை, மூங்கில் மண்டி சாலை, காந்தி சாலை ஆகியவற்றில் செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பிகளாக மாற்றியமைக்க அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளும் மேல் நிலை மின் தட பாதைகளை புதைவடமாக மாற்றும் பணி 100% நடைபெறுகிறது. பெரம்பூர், தாம்பரம், ஆவடி, அடையார், ஐ.டி காரிடார் உள்ள 5 கோட்டங்களில் உயரழுத்த மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றியமைக்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் முடிவடையும்.
அடுத்த ஆண்டு சென்னையில் மேலும் 7 கோட்டங்களில் சென்னையில் புதைவடமாக மாற்றும் பணிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மின் வழித்தடங்கள் புதை வடமாக மாற்றும் பணி முடிந்த பிறகு மற்ற மாநகராட்சிகளில் புதைவட மின் பாதை மாற்றுவதற்கு முதலமைச்சர் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு "செல்லூர் ராஜூ" - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் - சிரிப்பால் அதிர்ந்த பேரவை