சென்னை: லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன் 94 வருடங்களாக செயல்பட்டு வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாட்டுக்கு நவம்பர் 17ஆம் தேதி முதல் வர்த்தகத் தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
மேலும், லக்ஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த இணைப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.யு.எம் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த வழக்கில், முறையான வங்கி ஒழுங்குமுறை விதிகளின் கீழ் வங்கிகள் இணைப்பு நடைபெறவில்லை என்றும் விதிமீறல் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் பாதிக்கப்படுவார்கள், எனவே இந்த இணைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, எம்.எஸ். ரமேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவு என்றும், இதில் தலையிட முடியாது என்றும் மறுத்து விட்டனர். அதே வேளையில், லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பங்குதாரர்களின் நலனை சிங்கப்பூரை சேர்ந்த டிபிஎஸ் வங்கி பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.