கோவை மாவட்டம் இடிகரை பகுதியில் அமைந்துள்ளது பள்ளிக்கொண்ட பெருமாள் கோயில். கி.பி 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் தேர் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில், 150 ஆண்டுகள் பழமையான இரண்டு தேர்கள் பயன்படுத்தபட்டு வந்தன. 2019ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட அந்த தேர்கள் பாழடைந்துவிட்டதாக கூறி, அவற்றை கைவிடவும், அவற்றிற்கு மாற்றாக புதிய தேர்களை செய்ய கோயில் செயல் அலுவலர் முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு கோயில் செயல் அலுவலர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், இம்முடிவானது ஆகம விதிகளுக்கும் முரணாக இருப்பதாகக் கூறி அதற்கு தடை விதிக்க கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், “தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கைவிடப்பட்ட தேர்களில் உள்ள புராதன சிலைகள், பொருள்கள் திருடப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகிவருகிறது. இந்நிலையில், 150 ஆண்டுகள் பழமையான இரண்டு தேர்களுக்கு பதிலாக புதிய தேர்கள் செய்வதற்காக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஏறத்தாழ மூன்று கோடி ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டுவந்த அந்த தேர்கள் நல்ல நிலைமையில் இருக்கும்போதே அது பாழடைந்துவிட்டதாக கூறி, அவற்றை கைவிட கோயில் செயல் அலுவலர், தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் முடிவெடுத்துள்ளனர். புராதான தேர்களை மாற்றும் முடிவை எடுத்த இம்மூவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய தேர்களை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து, அவற்றை பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி, அவற்றை கொண்டு தேர் திருவிழாவை நடத்த வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
![Case seeking to bar the decision to make new chariots](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9777021_che.jpg)
இந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், “வழக்கு குறித்து இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் ஆய்வு துறை, கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க : நாகர்கோவில் அருகே சொகுசு கார் திருட்டு!