ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் நாளன்று, பள்ளிக்கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் அடங்கிய ஆவண புத்தகம் வெளியிடப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதன்படி ஜூலை 2ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றபோது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் புள்ளி விவர புத்தகம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு, அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிந்திருக்கும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பள்ளிகளில், 4.15 லட்சம் மாணவர்கள் குறைந்த நிலையில், தனியார் பள்ளிகளில் 12.10 லட்சம் மாணவர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களை, இந்த ஆண்டு வெளியான புள்ளி விபரங்களுடன் ஒப்பிட்டுபார்த்தபோது, அரசு பள்ளிகள் அபாய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
மாணவர்கள் எண்ணிக்கை புள்ளி விபரம்: 2017-18ஆம் கல்வியாண்டில் 37,358 அரசு பள்ளிகளில் 46,60,965 மாணவர்களும், 2018-19ஆம் கல்வியாண்டில் 37,459 அரசுப் பள்ளிகளில் 44,13,336 மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு 2,47,629 மாணவர்கள் குறைந்துள்ளனர்.
2017-18ஆம் கல்வியாண்டில் 8,386 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23,99,017 மாணவர்களும், 2018-19ஆம் கல்வியாண்டில் 8,357 அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 22,31,088 மாணவர்களும் படித்து வருகின்றனர். இதன்படி இந்தாண்டு 1,67,929 மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2017-18ஆம் கல்வியாண்டில் 12,730 சுயநிதி பள்ளிகளில் 52,71,543 மாணவர்களும், 2018-19ஆம் கல்வியாண்டில் 12,918 சுயநிதிப் பள்ளிகளில் 64,81,598 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதை வைத்து பார்க்கும்பொழுது சுயநிதி பள்ளிகளில் 12,10,055 மாணவர்கள் அதிகரித்துள்ளனர்.
அதேபோல், 2018-19ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மொத்தமாக ஒரு கோடியே 31 லட்சத்து 26 ஆயிரத்து 22 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் 2017-18ஆம் கல்வியாண்டில் 1 கோடியே 23 லட்சத்து 31ஆயிரத்து 525 மாணவர்கள் படித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட இந்தாண்டு 7 லட்சத்து 94 ஆயிரத்து 497 மாணவர்கள் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர் என்பதை காட்டுகிறது.
அரசு பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன எனவும், மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகின்றன எனவும், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கல்வியாளர்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அரசு, இனியாவது அரசு பள்ளிகளை வலுப்படுத்தும் வகையில்,தேவையான சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.