சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 3.70 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், சென்னையில் 1,600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் எண் மூலம் முன்பதிவு தேவைப்பட்டது.
இதனால், ஆதார் அட்டை இல்லாத சாலையோரம் வசிப்போர், வீடற்றோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில், ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சென்னையில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். தடுப்பூசி கையிருப்பு அதிகம் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஒரு நாளில் 28 ஆயிரம் பேருக்கு கரோனா