டெல்லி: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் இன்று (மார்ச் 1) 6ஆவது நாளாக தொடர்கிறது. உக்ரைன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு குறித்தும் ராம்நாத் கோவிந்திடம் விளக்கமளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உக்ரைனில் உள்ள இந்திய குடும்பங்கள், மாணவர்களை தாயகம் அழைத்து வர 'ஆபரேஷன் கங்கா' என்ற திட்டம் தொடங்கப்பட்டு விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வர, திட்டத்தை ஒருங்கிணைக்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு நான்கு ஒன்றிய அமைச்சர்கள் குழு ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு மற்றும் ஜெனரல் விகே சிங் (ஓய்வு) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 218 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஒன்பதாவது விமானம் ரோமானியா தலைநகர் புகாரெஸ்டிலிருந்து டெல்லிக்கு இன்று புறப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழ்நாட்டு மாணவர்கள்