லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தின் மரக்கா பகுதியில் 50 பயணிகளுடன் யமுனை ஆற்றில் சென்றுகொண்டிருந்த மோட்டார் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதுகுறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மரக்கா போலீசார் மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து மரக்கா போலீசார் தரப்பில், "இந்த படகு ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள அசோக் கால்வாய் பகுதியிலிருந்து பண்டா மாவட்டம் நோக்கி புறப்பட்டதாகும். இந்த விபத்து வலுவான நீரோட்டம் காரணமாக ஏற்பட்டுள்ளது. இன்று (ஆக 11) மாலை நிலவரப்படி 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்புக்குழுவினருடன் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனப். முதல்கட்ட தகவலில் உயிரிழந்தவர்கள் ஃபதேபூர் மாவட்டம் அசோதர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதோடு பரத்ப்பூர் மாவட்ட காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்துக்காக மாமியாருடன் குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்த பெண்