இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களை அதிகம் பாதித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்த இடம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை, வயதானவர்களைத் தோளில் சுமந்து கொண்டு, நகரத்தை விட்டு வெளியேறினர். ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, நாள்தோறும் கிடைக்கும் தினசரி கூலியை வைத்துகொண்டு வாழ்வை நகர்த்தி வந்த கூலி தொழிலாளர்கள், முழுமையான முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்த நிலையில் தங்களின் சிறு சேமிப்பும் தீர்ந்துவிட்டதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கூலித் தொழிலாளர்களின் பட்டினிச்சாவுகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்பவர் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அத்தகைய தொழிலாளர்களுக்கு ‘பணியாளர் வருங்கால வைப்பு நிதி’யில் இருந்து பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி வரை பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பைச் செலுத்தி வந்த ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 891 உறுப்பினர்கள் இந்த ஏற்பாட்டின் மூலமாகப் பலனை பெற்றுள்ளனர்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்குவதற்கு இடங்கள் இந்தியா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மன ரீதியிலான பிரச்னைகளை எதிர்கொள்ள மத்திய மனநல நிறுவனங்களின் வல்லுநர்கள், ஆலோசகர்கள் உதவிகளை புரிந்து வருகின்றனர்.
மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் வழங்கிய சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியா முழுவதும் 37 ஆயிரத்து 978 நிவாரண முகாம்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் கிட்டத்தட்ட 14.3 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேற்கூறியவற்றைத் தவிர, 1.34 கோடி நபர்களுக்கு உணவு வழங்க 26 ஆயிரத்து 225 உணவு வழங்கும் முகாம்களும் திறக்கப்பட்டுள்ளன.
அவர்களின் அன்றாட தேவைகள் கவனிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் எங்கு வேலை செய்கிறார்களோ, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களது அன்றாட தேவைகள் அந்தந்த மாவட்ட கிராம நிர்வாகங்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன.
வாடகை விடுதிகளில் வசிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், இன்ன பிற கூலித் தொழிலாளர்கள், ஏழை மக்கள் ஊரடங்கு காலத்தில் வாடகை செலுத்த வேண்டியதில்லை. இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட நிர்வாகமும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு பார்த்தால், தொழிலாளர்கள் குடியேறியுள்ள இடங்களிலிருந்து அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு விரைந்து செல்வதற்கும் அவசியமில்லை” என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : மருத்துவத் துறையில் சாதிக்கும் இந்திய ரயில்வே!