கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத குதிரையில் செல்வதுபோன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனையடுத்து மாணவின் தேர்வு ஆர்வத்தை வெகுவாக பாராட்டி பலர் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில், மஹிந்திரா ஆட்டோமொபைல்ஸ் குழுமத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா, அந்த வீடியோவை, தன்,ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, 'பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த வீடியோ, உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்றும், இந்தியா ஒளிர்கிறது' என்பதற்கான அடையாளம்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு அடுத்ததாக 'திருச்சூரில் அந்த மாணவி பற்றி தெரிந்தவர்கள், புகைப்படம் அனுப்பலாம்; அந்த மாணவியின் படத்தை, மொபைல்போனில், 'ஸ்க்ரீன்சேவர்' ஆக வைத்துக்கொள்வேன்' என்றும் கூறி இருந்தார்.
இதைப் பார்த்த, ரேடியோ ஜாக்கியான, லிஷ்னா, 'மாணவி பெயர் கிருஷ்ணா என்றும் அது அவரது வளர்ப்புக் குதிரை என்றும், அதன்பெயர் ராமகிருஷ்ணா என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் விரைவில் அந்த மாணவியை பேட்டி காண உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, மாணவியின் படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. அதேசமயம், சாலையில் குதிரை ஓட்டுவது ஆபத்தானது என்றும், இது ஒரு, 'ஸ்டன்ட்' என்றும், பலர் விமர்சித்து உள்ளனர்.
கடந்த ஆண்டு, கல்விச் செலவை சமாளிக்க, மீன் விற்ற கேரள மாணவி, ஹனன் ஹமிதி குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவிக்கு, வாகனம் வழங்கி உதவியவர், ஆனந்த் மஹிந்திரா. இந்த சூழலில் மாணவி கிருஷ்ணாவிற்கு எந்தவகையில் ஆனந்த் மஹிந்திரா உதவுவார் என பலரிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.