அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கண்டறியும் பொருட்டு அந்த மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டது. குடியுரிமை திருத்த மசோதாவின்படி வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வந்து ஆறு ஆண்டுகளாக வசித்துவரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பெளத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டன. அப்போது பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியானது. அதில் மொத்தம் 19 லட்சத்து ஆறாயிரத்து 657 பேர் இறுதிப்பட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு முன்னாள் தலைவர் ஃபக்ருதின் அலி அகமதின் குடும்பத்தார் உள்ளிட்ட பலரின் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், "அஸ்ஸாம் மாநிலத்தில் வன்முறைக்கு காரணமான சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டது. அது எதிர்காலத்துக்கான அடிப்படை ஆவணம். சட்டவிரோதமாகக் குடியேறிவர்களால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. களநிலவரத்தை அறியாதவர்கள் தவறான பிம்பத்தை வெளியுலகுக்கு காட்டுகின்றனர். இது ஒன்றும் புதிய திட்டமல்ல.
1951ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டினை புதுப்பிக்கும் முயற்சி சென்றுகொண்டிருக்கிறது. பொறுப்பற்ற சில ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்திகளால் அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது" என்றார். ரஞ்சன் கோகாய் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவின் புதிய வரைபடத்தை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்