“இது நல்லாருக்கு..” காட்டுக்குள் தீவனம் கிடைத்தும் யானை ஊருக்குள் வருவதாக மக்கள் வேதனை! - elephant movement in kadambur
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Jun 8, 2024, 5:01 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-06-2024/640-480-21665589-thumbnail-16x9-erd.jpg)
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கடம்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது கடம்பூர் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்த போதிலும், வனத்துக்குள் போதிய தீவனம் மற்றும் தண்ணீர் கிடைக்கும் நிலையிலும், ஒற்றை யானை ஊருக்குள் புகுந்து செல்வது வாடிக்கையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, எக்கத்தூர் கிராமத்துக்குள் புகுந்துள்ளது. பின்னர், அங்குள்ள மானாவாரி நிலங்களில் உலாவிய யானை, வாழை, மக்காச்சோளப் பயிர் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளது. மேலும், கோடை மழையில் உளுந்து சாகுபடி செய்த நிலங்களிலும் யானை புகுந்து துளிர்விடும் பயிர்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளது.
அதனைத் தொடர்ந்து, எந்தவித அச்சமின்றி ஹாயாக ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை, மானாவாரி நிலத்தின் வழியாக காட்டுக்குள் சென்றுள்ளது. இவ்வாறு யானை நடமாட்டத்தினால் எக்கத்தூர் மக்களின் அன்றாட விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டதால், எக்கத்தூர் கிராம விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.