Published : Feb 14, 2024, 1:32 PM IST
அதிமுக 40 இடங்களிலும் வெல்வது கனவில் தான் நடக்கும் - ஜெ.தீபா!
திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்கு, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனரும், பொதுச் செயலாளருமான ஜெ.தீபா அவரது குடும்பத்துடன் அவரது குழந்தைக்கு மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தீபா, "தான் அரசியலில் இருந்து விலகி வெகு காலம் ஆகிவிட்டது, தற்போது நடைபெறும் அதிமுக அரசியல் விளையாட்டுக் களம் போல உள்ளது. இந்த முறை 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பது கனவில் தான் நடக்கும்.
அதிமுக மீண்டும் ஒன்றாக சேர்ந்தாலும் ஒற்றுமையாக இயங்குவார்களா என்பது சந்தேகமே. தேர்தலில் வெற்றி, தோல்வியை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக சட்டப்பேரவை பொருத்தமட்டிலும், ஆளுநர் அவருடைய வேலையை செய்ய வேண்டும், ஆளும் திமுக அரசு அவர்களுடைய வேலையை செய்ய வேண்டும்.
ஒருவர் வேலையில் ஒருவர் தலையிடும் போது தான் பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது, திமுக மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் தற்போது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது" எனத் தெரிவித்தார்.