கனமழையால் ஓடையாக மாறிய கிராமம்! நீச்சலடித்து நடமாடும் அவலநிலை
Published : 7 hours ago
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக வரதராஜபுரம் பகுதியில் உள்ள புளியமரத்து ஓடையில் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.
அப்போது ஓடையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வரதராஜபுரம் கிராமத்திற்குள் புகுந்தது. அந்த கிராமத்தில் உள்ள ஒத்த வீடு பகுதியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு உள்ள குடியிருப்புக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாக்கப்பட்டனர். மேலும் அருகில் உள்ள கோயிலில் அனைவரும் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பலத்த மழை பெய்யும் போதெல்லாம் இதுபோன்ற பிரச்னை வரதராஜபுரம் கிராமத்தில் நிகழ்வது வழக்கமாக இருப்பதாகவும், இதுகுறித்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் மழைநீர் ஊருக்குள் வராதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும் ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.