ஆம்பூர் அருகே அசால்ட்டாக பைக்கை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்! - Bike theft in Ambur

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 1:59 PM IST

thumbnail
இருசக்கர வாகனம் திருடும் சிசிடிவி காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மின்னூர் சுபாஷ் நகரைச் சேர்ந்தவர் ராம்குமார். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அஜித் குமார் என்பவரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு, குடும்பத்துடன் பருகூர் பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின் மீண்டும் வீடு திரும்பிய ராம்குமார், இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்துள்ளார். 

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர், இன்று (ஜூன் 3) அதிகாலை ராம்குமாரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து, வாகனம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராம்குமார், உடனடியாக அருகில் இருந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளார். அதில், இருசக்கர வாகனத்தை மூன்று இளைஞர்கள் சேர்ந்து கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. 

இந்த திருட்டுச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, ராம்குமார் உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, புகாரை பெற்றுக் கொண்ட ஆம்பூர் கிராமிய காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.