thumbnail

திண்டுக்கல் நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளை உயிரிழப்பு..! காரணம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 8:31 AM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று(பிப்.12) நடைபெற்றது. இதில், திண்டுக்கல், மதுரை, திருச்சி, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. 

மேலும், வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை அடக்குவதற்காக 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், போட்டியில் சீறிவரும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விழாக் குழுவின் சார்பாக பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே, வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்ட மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவருடைய காளை வெற்றி பெற்று வாடிவாசலிலிருந்து வெளியே சென்றபோது காளையை உரிமையாளர்கள் கயிறு வீசிக் காளையைப் பிடிக்க முயற்சித்தனர். தோட்டனூத்து அருகே காளை பிடிபட்டது. பின்னர் மூக்கு கயிறு கோர்க்கும் போது எதிர்பாராத விதமாக, காளை திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இந்நிலையில், காளையை அடக்கம் செய்வதற்காக ஆட்டோ மூலம் மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்திற்கு உரிமையாளர்கள் எடுத்துச் சென்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.