"கார்பன் உமிழ்வு இல்லா போக்குவரத்து.. புதிய செயலியை அறிமுகம் செய்த சென்னை ஐஐடி! - IIT MADRAS
2050-ம் ஆண்டில் 100 சதவீதம் கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து என்ற (ZET) இலக்கை எட்டுவதற்கான மிக முக்கிய முன்முயற்சியைத் சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இதற்கான ஒட்டுநர் மதிப்பீட்டு ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Published : Dec 9, 2024, 7:48 PM IST
சென்னை: இந்தியாவின் வாகனப் போக்குவரத்தில் 5 சதவீத அளவுக்கு மட்டுமே சரக்கு லாரிகள் உள்ள நிலையில், சுமார் 65 சதவீதம் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இது கணிசமான அளவு காற்று மாசுக்கும், எரிபொருள் நுகர்வு செலவுகளுக்கும் இது வழிவகுக்கிறது. எனவே மின்சார சரக்கு லாரிகள் போன்ற கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்துவது அவசியமாகிறது.
இந்தநிலையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்துக்கான உயர் சிறப்பு மையம் (Centre of Excellence for Zero Emission Trucking –COEZET) மற்றும் ஓட்டுநர் மதிப்பீடு செயலித் திட்டம் (Project Driver Rating application –DRA) ஆகிய இரண்டு பெரிய திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓட்டுநர் மதிப்பீடு செயலித் திட்டம்:
- இது பாதுகாப்பு மற்றும் ஆற்றல் திறன் குறித்த சரக்குலாரி ஓட்டுநர் நடத்தையை மதிப்பிட செயற்கை
நுண்ணறிவால் இயக்கப்படும் மொபைல் ஆப் - சரக்கு லாரி ஓட்டுநர்களிடையே பாதுகாப்பான, திறமையான ஓட்டுநர் நடத்தையை
ஊக்குவித்து செயல்படுத்த உதவும். - சாலை உள்கட்டமைப்பின் நிலையான சூழலுடன் தொடர்புடைய போதிய ஓட்டுநர்
நடத்தை குறித்து ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முன்கூட்டிய விழிப்புணர்வுத்
தகவல்கள் மொபைல் செயலியில் இருக்கும். - மாதத்திற்கு குறைந்தபட்சம் 4,000 கி.மீ. தூர இயக்கக்கூடிய சரக்கு லாரிகளின்
ஓட்டுநர்கள் இதில் பதிவு செய்ய வேண்டும்.
பயனரை நேரடியாகச் சென்றடையும் திட்டம் (Project Outreach) :
- கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து பற்றி சரக்கு லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்துதல். - ஓட்டுநர்கள், உதவியாளர்கள், மெக்கானிக்குகள், பெட்ரோல் பங்க் நடத்துவோர், வாகன
உதிரிபாக உற்பத்தியாளர்கள், குறைந்த அளவில் வாகனங்களை இயக்குவோர் உள்ளிட்ட
இறுதிப் பயனர்களிடையே கார்பன் உமிழ்வு இல்லாமை பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்த பிரச்சார நிகழ்வுகளை நடத்துதல். - குறைந்தபட்சம் 200 இடங்களில் நேரடி நிகழ்வுகள் மூலம் ஓட்டுநர்களை
நேரடியாகவும், பயனர்களுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான டிஜிட்டல் தகவல்
தொடர்புகள் மூலமாகவும் சென்றடையும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, "இந்தியாவில் சரக்கு லாரிப் போக்குவரத்து தொழில் சீரான வளர்ச்சிப் பாதையிலிருந்து வருகிறது. சாலைவழி சரக்குப் போக்குவரத்தில் 70 சதவீதம் லாரிகள் மூலம்தான் கொண்டு செல்லப்படுகின்றன.
இத்தகைய முன்முயற்சிகள், இந்தியாவில் நீடித்த ஈடுபாட்டுடன் கூடிய சரக்கு லாரிகள் மின்மயமாக்கலை திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே விரைவுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் பெட்ரோலிய இறக்குமதிச் செலவுகள் மிச்சமாவதுடன் போட்டித்தன்மையும் அதிகரிக்கும். கார்பன் உமிழ்வைக் குறைப்பதுடன் ஓட்டுநரின் வசதி மற்றும் நல்வாழ்வை அதிகரிக்கிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹூமோ டயாலிசிஸை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதா? டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு!
இதனை தொடர்ந்து, சென்னை ஐஐடி பொறியியல் வடிவமைப்புத் துறைத் தலைவர் சங்கர்ராம் கூறும்போது,"லாரிகளை இயக்குவோர், அரசாங்கம் உள்ளிட்ட இதர தொடர்புடையோரின் செயல்பாடுகள் பணம், கொள்கை, உமிழ்வு- எரிசக்தி பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை சார்ந்து செயல்படும்போது ஓட்டுநர்கள்தான் எந்த மாற்றமாக இருப்பினும் நேரடி தாக்கத்தை, அதுவும் அன்றாடம் ஏற்படுத்தக் கூடியவர்கள்.
மின்சார சரக்கு லாரிகளைப் பயன்படுத்தும்போது, சப்தம், அதிர்வு, வெப்பம், சோர்வு, வேகம் போன்றவைகளை ஒப்பிடுகையில் அவர்களின் தனிப்பட்ட வசதிகள் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு மேம்படும். அதே நேரத்தில் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு வசதியாக தங்கள் பயணத்தில் கூடுதலாக இரண்டு மணி நேரத்தை ஒதுக்கும் வகையில் அவர்கள் பயண அட்டவணையை முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கும். இதுபோன்ற மாற்றங்களை ஓட்டுநர்கள் முன்கூட்டியே புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.